கொத்தடிமைகளை மீட்க பருந்தின் பலத்தோடு போராடும் ஒரு குருவியின் கதை இது.
காயலாங்கடை காரை வைத்தே ரேஸில் ஜெயிக்கும் அசகாய சூரன்தான் ஹீரோ என்றால் அவர் செய்யும் மற்ற சாகசங்கள் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளலாம்.
அப்பாவுக்கு மலேசிய பெரும்புள்ளி ஒருவர் கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் செய்வதற்காக குருவியாக (உயர்ரக பொருட்களை நாடு விட்டு நாடு சேர்க்கும் வேலை) மலேசியா செல்கிறார் நாயகன் விஜய். போன இடத்தில்தான் புரிகிறது அந்த பெரும்புள்ளி (சுமன்) மலை விழுங்கி மகாதேவன் என்பது.
அப்புறமென்ன வில்லன் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்ட, வில்லங்கத்தை விலைக்கு வாங்குகிறார். இடையில் வில்லனின் தங்கையான த்ரிஷாவிற்கு விஜய் மேல் காதல் ஏற்படும் காட்சிகளும் எந்த படத்திலும் காணாத (புதுமை). சுமன் வைத்திருக்கும் டைமண்டை 'சுட்டு'க்கொண்டு சென்னை வரும் விஜய்க்கு அப்பாவும் அவரை சேர்ந்த ஆட்களும் கொத்தடிமைகளாக ஆந்திராவில் இருக்கும் தகவல் வர, அடுத்த ஷாட்டுகளில் கதாநாயகனின் அதிரடி கடப்பாவையே கலங்கடிக்கிறது. நூற்றுக்கணக்கான அடியாட்களை ஸாரி தடியாட்களை தவிடுபொடியாக்கி சக்ஸஸ் சாகசம் புரிவதுடன் கொத்தடிமைகளுக்கும் நமக்கும் கிடைக்கிறது விடுதலை.
விஜய்யை சூப்பர்மேன் ரேஞ்சுக்கு உயர்த்தி காட்டிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் கோயம்பேடு மலர் அங்காடியை படம் பார்ப்பவர்களின் காதுக்கு மாற்றியிருக்கும் தரணியின் உழைப்பிற்கு போடலாம் சலாம்!
மின்னல் வேகத்தில் பாயும் காரிலிரு்து கட்டாகும் பிரேக் கேபிளை பற்களால் இழுத்துபிடித்து பேலன்ஸ் செய்யும் விஜய்க்கு உயரமான கட்டிடத்திலிருந்து பறந்துவந்து மின்சார ரெயிலை பிடிப்பதும், கயிற்றில் தொங்கியபடி அந்தரத்திலிருந்து கீழே விழும் த்ரிஷாவை அழகாக காப்பாற்றுவதும் சிரமமான காரியமா என்ன?
பார்க்கிறவர் பைத்தியக்காரர் என்றால் ஆகாய நிலாவை பிடித்து கால்பந்தாடலாம் வா என்றழைப்பார்போல இயக்குனர். என்னென்னவோ செய்துதான் 'குரு' கமலஹாசன் தங்கமீனை கடத்தவேண்டியிருந்தது. அப்போது மட்டும் தரணி இயக்குனராகயிருந்திருந்தால் கமல் அவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை. பத்து விநாடிகளில் வில்லன் வைத்திருக்கும் டைமண்டை விஜய்யின் கைக்கு வரவைக்கும் வித்தையெல்லாம் ஹாலிவுட் காரர்களும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.
கடப்பாவிற்கு கதை நகர்ந்தவுடன் ஆந்திரா காரத்தை அள்ளித் தெளிக்க, நம் கண்களெல்லாம் எரிச்சலில் அழ ஆரம்பிக்கிறது. விஜய் அடித்த அடியில் சுயநினைவிழந்துபோகும் நிலைமை சுமனு்ககும் அவரது ஆட்களுக்கும். விஜய்போல பலம் பொருந்திய வீரர்கள் இந்திய ராணுவத்திற்கு தேவை.
இடுப்பு சுளுக்கு காட்சியில் ஆரம்பித்து 'மொழுமொழுன்னு யம்மா...' பாட்டுவரை நிறையவே பயன்பட்டிருக்கிறது த்ரிஷாவின் மத்தியபிரதேசம்.
சுமன் கோமா ஸ்டேஜிக்கு போனதும் அந்த இடத்தை யார் நிரப்புவது என யோசித்த இயக்குனர், ஆசிஷ் வித்யார்த்தியை கொஞ்சநேரம் சுத்தவிடுகிறார். கொண்டா ரெட்டி கதாபாத்திரத்தில் ஆசிஷ் வித்யார்த்திக்கு மற்ற படங்களை போலதான் இதிலும் ஒரே மாதிரியான ரியாக்ஷ்ன்.
என் மகன் எப்படியாவது எங்களை காப்பாத்த வருவாண்டா...என்று டயலாக் போசும் லட்சத்தில் ஒரு சினிமா தந்தையாக மணிவண்ணன்.
பல குரலில் பேசியே காலந்தள்ள பார்க்கும் விவேக்கின் திறமையும் பாராட்டுக்குரியது. எருமை மாடு மாதிரி இருந்து கொண்டு சிறுவனின் பிஞ்சு விரல் மசாஜ் சுகம் காணும் கடப்பா ராஜூ கேரக்டரெல்லாம் வக்கிரத்தின் உக்கிரம்.
ஆறில் மூன்று பாட்டாவது மெலடி மெட்டுப்போடும் வித்யாசாகர் டப்பாங்குத்து ரூட்டிற்கு வந்திருப்பது வருத்தமே. 'தேன், தேன் தேன்...' பாடல் மட்டும் ஆறுதல். தேவைப்பட்ட உபகரணங்கள் கிடைத்ததால் கோபிநாத்தின் ஒளிப்பதிவு பாராட்டு வாங்கும்.
கதைக்கு ஒத்துவராத செட்டுக்களில் உதயநிதியின் காசெல்லாம் கரியாகியிருக்கிறது. சரி அதனாலென்ன 'போனால் போகட்டும் போடா...' பாடலை விநியோகஸ்தர்களுக்கு டெடிகேட் பண்ணிவிடலாம்.
கதாநாயகன் விஜய்க்கு எவ்வளவு பெரிய மாஸ் இருந்தாலும் மசாலா ரூட்டிலிருந்து மாறாதது ஏனோ? கொஞ்சமாவது வித்தியாசமா பண்ணணும்னு ட்ரை பண்ணுங்க சார்.
சிறகொடிந்த 'குருவி'.