'புதுவசந்தம்' காலத்து தோழர்கள் படம் அதனை புதுசாக தந்திருக்கிறார் இயக்குனர் சுந்தரேஸ்வரன்.
நித்தின் சத்யா, விஜய், பிரேம்ஜி மூவரும் ஒரே அறையில் இருக்கும் நண்பர்கள். இதில் சிங்கிள் டீக்கே சிங்கியடிக்கும் தண்டங்களாக விஜய், பிரேம்ஜி. முன்னவருக்கு நடிகனாகும் ஆசை, பின்னவருக்கு அரசு வேலைவாங்கும் லட்சியம். நித்தின் மட்டும் இன்ஜினியராக இருப்பதால் வாடகை கொடுப்பதிலிருந்து வயிற்றுப்பசி ஆற்றுவதுவரை உதவிக்கரம் நீட்டுகிறார்.
இந்த மூவேந்தர்களில் நான்காவது ஆளாக வந்து சேர்கிறார் அஜய். தங்கையை காதலித்து ஏமாற்றியவனை போட்டுத்தள்ளுவதுதான் இவரது லட்சியம். நான்கு பேரின் வாழ்க்கையில் சந்திக்கும் இடியாப்ப சிக்கல்களை குழப்பாமல் சொல்வது ஆறுதல்.
நாலு பேருக்கும் குறைவைக்காமல் நடிப்பில் தீணியை அளந்து வைத்திருக்கும் இயக்குனரின் சாமர்த்தியம் பலே. புதுசா வந்திருக்கும் அஜய்யின் பணத்தை ஆட்டையைப் போட்டுவிட்டு, விஜய் - பிரேம்ஜி செய்யும் ஆர்ப்பாட்டங்களால் உய்...என்று கேட்கிறது தியேட்டரில் விசில் சப்தம். நடிகனாகும் ஆசையில் ரஜினி ஸ்டைலில் துறுதுறுவென்று பந்தாடுவதும், கோடீஸ்வரனாக காட்டிக்கொண்டு காதலியிடம் உதார்விடும்போதும் விஜய் சபாஷ் போடவைக்கிறார்.
ஹவுஸ் ஓனர் பெண்ணை நினைத்து ஜொள் விடுவது, வேலை கேட்கும் இடத்தில் வரும் நிராகரிப்புகளால் உள்ளம் உடைவது என பிரேம்ஜியின் நடிப்பிலும் பிரகாசம். அரிவாளும் கையுமாக தங்கையின் சாவுக்கு காரணமானவனை கைமா பண்ண துடிக்கும் அஜய் காட்டுப்புரத்தானின் கேரக்டரோடு ஒன்றியிருக்கிறார்.
விதிசெய்யும் சதியால் காதலியை பிரியும் நித்தின் அந்த வலியை மனசுக்குள்ளேயே புதைத்து புழுங்கும்போது தனிமையின் இறுக்கத்தை சரியாக வெளிப்படுத்தியுள்ளார். நேற்று முளைத்த காளானை மழைக்கு குடையாக பிடிப்பதுபோல பொருத்தமில்லாத வக்கீல் வேடத்தை ஜெனிபரின் தலையில் சுமத்தியிருப்பது வேடிக்கை. அதுவும் வக்கீல் உடையணிந்து வரும்போது பள்ளிக்குழந்தைகளின் பேஷன் டிரஸ் மாதிரி காமெடியாக இருக்கிறது.
இவரை தவிர இன்னும் மூன்று கதாநாயகிகள். ம்...ஹூம் எவரும் தேறவில்லை.
நித்தினின் தலையில் ஏற்பட்ட வியாதிக்கு வாயில் நுழையாத பெயரை டாக்டர் சொல்லும்போது ஆபரேஷன் செய்த பேஷண்டின் நிலை நமக்கு.
வரதச்சனையால் கல்யாணம் நின்று காதலனின் நல்ல கேரக்டரால் அவரையே மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும் க்ளைமாக்ஸ் காட்சியெல்லாம் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் யூஸ்பண்ணுவார்களோ? அய்யோ கொடுமை!
முண்டம் மட்டும் இருக்கும் போட்டோவை வைத்துக்கொண்டு தங்கையின் காதலனை அஜய் கண்டுபிடிக்க நினைக்கும் காட்சிகளில் சுவற்றில் முட்டிக்கொண்டு அழுவதைத்தவிர வேறு வழியில்லை.
பிரேம்ஜியின் இசையில் 'காதல் தேவதை...', 'அடியே என் அன்னக்கிளி...' பாடல்கள் இரண்டும் எப்.எம்.களின் ஹிட் ரகமாகிவிடும்.
மேற்சொன்ன சில லாஜிக்கயும், க்ளைமாக்ஸ் இழுவையையும் குறைத்திருந்தால் 'தோழா' விற்கு கைகுலுக்கியிருக்கலாம்.