
Written by: JBR
"மலையாளப் படங்களில் நம் மண்ணிற்கு தொடர்புடைய கதை கண்டிப்பாக இருக்கவேண்டும். தமிழ் படங்களில் அப்படியொன்று தேவையில்லை."
"கோயிலுக்கு ஜெர்கின் அணிந்து கொண்டு போவது..... தூங்கும்போதும் ஷூ போட்டுக்கொள்வது என்று தமிழ் படங்களின் வாசம் மலையாளப்படங்களிலும் அடிக்கத் துவங்கியிருப்பது கவலைப்பட வேண்டிய விஷயம்."
தமிழ், மலையாளப் படங்கள் குறித்து மம்முட்டி, ஜெயராம் கூறிய கருத்துக்கள் இவை.
மலையாள நடிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கு வெளியே நல்ல சினிமா குறித்து பேசும் அனைவருக்கும் தமிழர்களின் படங்கள் குறித்தும் ரசனை குறித்தும் தாழ்வான எண்ணமே மேலோங்கியிருக்கிறது. (இது தெலுங்கு மற்றும் இந்திப்படங்களுக்கும் பொருந்தும்.)
அவர்கள் கூறுவதுபோல் தமிழர்களின் சினிமா... ரசனை தரம் தாழ்ந்ததா?
ஆம், என்று சொல்பவர்கள் காலங்காலமாக சில விஷயங்களை ரசனைக்குறைவுக்கான காரணங்களாக குறிப்பிடுகிறார்கள். அதில் ஒன்று மிகையுணர்ச்சி!
மிகையான நடிப்பு, மிகையான காட்சி மற்றும் மிகையான உணர்வுகள்!
சிவாஜிகணேசனின் நடிப்பையே மிகைநடிப்பு என்று ஒதுக்கும் சினிமா ரசிகர்கள் இன்றும் கணிசமான அளவு உள்ளனர்.
'ஆட்டோகிராஃப்', 'காதல்' போன்ற யதார்த்தத்தை மிக அருகில் தரிசித்த திரைப்படங்களுக்குப் பிறகும் இந்த மிகையுணர்ச்சி ஒரு அட்டையை போல் தமிழ் சினிமாவில் ஒட்டிக்கொண்டுள்ளது.
உதாரணமாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீ-மேக் செய்யப்பட்ட 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி', 'கஸ்தூரிமான்' படங்களை சொல்லலாம்.
'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி'யின் மூலமான மலையாளப்படத்தில் கவர்ச்சி நடனமோ, டூயட்டோ இடம்பெறவில்லை. மாறாக 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி'யில் மலிவான முறையில் கமர்ஷியல் என்ற ஒரு காரணத்திற்காக இவ்வகை பாடல் காட்சிகள் திணிக்கப்பட்டன.
திரையில் நடிகையை பார்க்கும் கணவன், நடிகை அணிந்திருக்கும் அதே கவர்ச்சி உடையை மனைவிக்கு வாங்கி வருகிறான். இதன் தொடர்ச்சியாக பாடல் காட்சி விரிகிறது. பொறுப்பற்று திரியும் சோம்பேறியை பற்றிய கதையில் இந்தப் பாடல்காட்சிக்கு எவ்வித தேவையும் இல்லை. இதுபோலவே ஹோட்டல் கிளப்பில் வரும் கவர்ச்சி நடனமும்.
தமிழ் ரசிகர்கள் நல்ல கதையையும் - கதைக்கு பொருந்துகிறதோ இல்லையோ- நாலு பாடல் காட்சிகள் இருந்தால் மட்டுமே ரசிப்பார்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு இது. தமிழ்... தமிழர்கள் குறித்து அதிகம் கவலைப்படும் தங்கர்பச்சானின் தமிழர்களின் ரசனை குறித்த பார்வையே இப்படியென்றால் மற்றவர்களை குறித்து பேச தேவையில்லை.
'கஸ்தூரிமான்' படத்திலும் இந்த 'மிகை' இடம்பெற தவறவில்லை. 'கஸ்தூரிமான்' படத்தில் அனைவரையும் கவர்ந்த கதாபாத்திரம் வினோதியின் மாமியாராக வரும் கொளப்புள்ளி லீலா. எதிர்மறை கேரக்டர் என்று சொல்ல முடியாத ஒரு வாழும் கதாபாத்திரம். மலையாளத்தில் சாதாரணமாக வரும் லீலா தமிழுக்கு வரும்போது முகத்தில் கரி பூசி கிட்டத்தட்ட வில்லன் அளவுக்கு காட்டியிருக்கிறார்கள். வில்லன் என்றால் முண்டா பனியன், கொடுவா மீசை, நரம்பு புடைக்கும் சத்தம் என்ற மலிவான எண்ணத்தின் வெளிப்பாடாகதான் லீலாவின் முகத்தில் பூசப்பட்டுள்ள கரியை எடுத்துக்கொள்ள முடிகிறது.
இதே படத்தில் கதாநாயகனின் குடும்ப வறுமை ஓரிரு காட்சிகளில் மலையாளத்தில் விளக்கப்படுகிறது. தமிழில், 'ஒரு முட்டை வாங்ககூட வழியில்லை', 'காலையில் கூட சாப்பிட எதுவுமில்லாமல் பட்டினியாகதான் போனான்' போன்ற வசனம் மற்றும் காட்சிளால் மிகையான நாடகத்தன்மையை அடைகிறது. இந்த காட்சிகள் தமிழுக்காக வலிந்து திணிக்கப்பட்டவை.
படத்தின் க்ளைமாக்ஸ், கதாநாயகன் நாயகியை ஜெயிலில் சென்று பார்த்து, அவளுக்காக காத்திருப்பதுடன் முடிகிறது. தமிழில் இதற்குப் பிறகும் பத்து நிமிடங்கள் படம் ஓடுகிறது. தமிழ் ரசனைக்கு ஒவ்வொன்றையும் விரிவாக சொன்னால் மட்டுமே புரியும் என்ற நோக்கில் சாதாரணமாக புரிந்து கொள்ளக்கூடிய விஷயங்களே அலுப்பூட்டும் காட்சிகளாகவும் வசனங்களாகவும் விவரிக்கப்படுகிறது.
தமிழ் இயக்குனர்களானாலும் சரி, வெளி மாநில இயக்குனர்களானாலும் சரி, தமிழ் படம் என்றால் மிகையுணர்ச்சியுடன் சொல்லப்படவேண்டும், புரிந்து ரசிக்கக்கூடிய விஷயங்களையும் விரித்து காட்சிப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துடனே படம் இயக்குகிறார்கள்.
இது தமிழர்களின் ரசனை குறைவால் ஏற்பட்ட குறையா அல்லது தமிழர்களின் ரசனையை குறைவாக மதிப்பிட்டதால் ஏற்பட்ட விளைவா?
தமிழ் படைப்பாளிகளுடன் பார்வையாளர்களும் முயன்று விடைதேட வேண்டிய கேள்வி!
|
Feedback!
|
|